Thursday, April 30, 2020

ILAMAI NAATIYA SALAI - KALYANAMAM KALYANAM



படம்: கல்யாணமாம் கல்யாணம்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஜயபாஸ்கர்
குரல்: எஸ்.ஜானகி, TMS 


இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம்
மனதில் ஆனந்த ராகம்

இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை

நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம்
நாடக மோகங்கள் தாலாட்டும் தேன் கிண்ணம்

இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா

வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து

வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
நாலு பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு
அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா

பூ மரத்தை குலுக்கிவிட்டு
பூமியெல்லாம் மணக்கவிட்டு
மாமனுக்கு தேன் கொடுக்க
மானைப் போல ஓடி வந்தா
தேன் குடத்தை சுமந்து வந்த செல்லக்கா
நீ ஏன் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா

http://www.dinamalarnellai.com/web/news/14559

அண்மையில் மறைந்த திரை உலக ஜாம்பவானான பஞ்சு அருணாசலத்திற்கு பெற்றோர் இட்ட பெயர், அருணாசலம். காரைக்குடியில் பள்ளிப்படிப்பின் போது, அவர் அருணாசலம் என்றுதான் அழைக்கப்பட்டார். ஆனால் அது அவர் தாத்தாவின் பெயர் என்பதால்,  திருவையாறு பஞ்சநதசுவாமி ஞாபகமாக பஞ்சநதம் என்று பெயர் வைத்து, ‘பஞ்சு’, ‘பஞ்சு’ என்று வீட்டில் அழைத்தார்கள். திரை உலகிற்கு வாய்ப்புத் தேடி வந்த பின், பஞ்சுவையும் அருணாசலத்தையும் இணைத்து, தன்னை பஞ்சு அருணாசலம் என்று அழைத்துக்கொண்டார், பஞ்சு அருணாசலம்!
சென்னையில் பஞ்சுவின் ஒரு சிற்றப்பா, மிகப்பெரிய தயாரிப்பாளரான ஏ.எல். சீனிவாசன். இன்னொரு சிற்றப்பா, பிரபல பாடலாசிரியர் கண்ணதாசன். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் கண்ணதாசன்  நடத்திக்கொண்டிருந்த ‘தென்றல்’ பத்திரிகையில்  சேர்ந்தார் பஞ்சு. அதன் பிறகு, கண்ணதாசன் தானே தயாரித்துக் கொண்டிருந்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திற்கு அவர் பாடல்கள் புனைந்தபோது, அவர் சொல்லச் சொல்ல வரிகளை எழுதும் உதவியாளராக இணைந்தார் பஞ்சு. அது அப்படியொன்றும் மிக எளிதான வேலை இல்லை. கவிஞர் வரிகளை கடகடவென்று கூறும் போது அவற்றை சட்டென்று பிடித்துக்கொண்டு மளமளவென்று எழுதவேண்டும். கையெழுத்தும் மணிமணியாக எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும்.
இலக்கியத்தின் மீதும், கவிதைகள் மீதும், சிறுகதைகள், நாவல்கள் படிப்பதிலும்,  பஞ்சு அருணாசலத்திற்கு   இயற்கையாக நாட்டம் இருந்தது. சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், காண்டேகர் போன்றவர்கள் எழுதிய நாவல்களின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து படிப்பார். கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டு, படி எடுத்துக்கொடுக்கும் போது, பாடல்களின் அமைப்பும் அவருக்குப் புரிந்தது. அவை திரைக்கதையில் சேரும் விதமும் விளங்கியது. சினிமாவிற்கு திரைக்கதை அமைக்கும் பாணியும் புரிந்தது. கண்ணதாசனின் உதவியாளராக இருக்கும் போதே, பஞ்சுவின் அதிர்ஷ்டத்திற்கு அச்சாரமாக சில பாடல் வாய்ப்புகள் வந்தன. ‘சாரதா’ படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில் பஞ்சு 1961ல் எழுதிய  ‘மணமகளே மருமகளே வா வா’,  அந்தக் காலத்தின்  வெற்றிப் பாடல் மட்டும் அல்ல, இன்றைக்கும் திருமண மண்டபங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 
ஜி.கே. வெங்கடேஷ் இசையில், ‘நானும் மனிதன்தான்’ (1964) என்ற படத்தில், ‘காற்று வரும் காலம் ஒன்று’ என்று பஞ்சு எழுதினார். இன்று வரை, பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி பாடிய மிக இனிமையான பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் உள்ளது. ஹிட்ச்காக்கின் ‘வர்டிகோ’ படக்கதையை மகாபலிபுரத்து சிற்பங்களின் சரித்திரத்துடன் பிசைந்து, ‘கலங்கரை விளக்கம்’ என்ற குழப்பகரமான எம்.ஜி.ஆர். படம் 1965ல் வந்தது. அதில் இடம்பெற்ற பஞ்சுவின், ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலின் இனிமையைக் குறித்து இன்று வரை எந்தக் குழப்பமும் இல்லை. இலக்கிய மணம், இனிமையான இசையிலும் குரல்களிலும் பெருகி ஓடும் போது யாருக்குத்தான் இன்பம் ஏற்படாது?
அதே ஆண்டான 1965ல் வெளிவந்த ‘கன்னித்தாய்’ படத்தில், எல்லாப் பாடல்களையும் பஞ்சு எழுதினார்.  சில பலித்தன...ஆனால் படத்தின் டைட்டிலில் பாடலாசிரியரின் பெயர் இல்லை. ‘தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா’ (‘ஏழைப்பங்காளன்’), ‘பூப்போல  பூப்போல பிறக்கும்’ (‘நானும் ஒரு பெண்’) முதலிய சிறப்பான பாடல்களை பஞ்சு எழுதியிருந்தார். ஆனால், பாடல்கள் புனைவதை விட்டுவிட்டு, கதை, வசனம் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும், இளம் பருவத்தில் கேட்ட திரைப்பாடல்கள்தான், அவரை திரைத்துறைக்கு ஈர்க்க ஒரு காரணமாக இருந்தன. தான் பாடல் எழுதுவதைப் பின் தள்ளியதற்கு காரணம், கண்ணதாசனின் திறமை  மீது ஏற்பட்ட பிரமிப்புத்தான் என்று கூறுவார் பஞ்சு. 
அது உண்மையாக இருந்தாலும், தனக்குத் திரை உலகில் இடம் கொடுத்த கண்ணதாசனோடு போட்டிப்போட வேண்டுமா என்ற உணர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், வாலி பிரகாசமாக வரத்தொடங்கியதும், கண்ணதாசனின் மகிமை குறையாமல் இருந்தாலும், அவருடைய வாய்ப்புகள் குறையத்தொடங்கி விட்டன.
பஞ்சு அருணாசலம் கதை, வசனகர்த்தாவாக தன்னை இனம் காட்டிக் கொள்ள எடுத்த முயற்சிகள், முதலில் அவ்வளவு எளிதாக ஈடேறவில்லை. பதினைந்து படங்கள் பாதியில் நின்றுபோய், அவருக்கு ‘பாதிக்கதை பஞ்சு’ என்றொரு பெயர் கூட வந்தது! 
பல ஆண்டுகளுக்குப் பின், 1974ல் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்று பஞ்சு மேளம் கொட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு,  வானம் பிய்த்துக்கொண்டு வாய்ப்புகளைக் கொட்டியது. 
‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தில் நாட்டுப்புறக்குடுமிக்கும் (ஜெய்சங்கர்), நாகரிகக் கொண்டைக்கும் முடிச்சுப் போட்டு வேடிக்கைப் பார்த்த பஞ்சு, ‘உங்கள் விருப்ப’த்தில், ஜெய்சங்கரையும் தேங்காய் சீனிவாசனையும் காதல் கிளினிக் திறக்க வைத்தார். 
‘உன்னைத்தான் தம்பி’ (1974) என்ற படத்தில், ஊரை ஏய்த்து காசு பார்க்க நினைக்கும் இரு நண்பர்களில் ஒருவர் (ஜெய்சங்கர்) திருந்தும் போது ஏற்படும் விளைவுகளைச் சொன்னார். ‘ஊழல் வளர்ந்ததென்ன, ஊரை ஏய்த்துப் பிழைத்ததென்ன, வீட்டை வளர்த்ததென்ன, நாட்டை கெடுத்ததென்ன’ என்ற கண்ணதாசனின் வரிகள் காலத்தைப் பிரதிபலித்தன.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்ற படத்தில், ‘மிஸ்ஸியம்மா’ கதையை  ‘உல்டா’ செய்தார் பஞ்சு. ‘மிஸ்ஸியம்மா’வில், திருமணம் ஆகாதவர்கள், கணவன் – மனைவி என்ற பொய்யைச் சொல்லி வேலையில் சேர்கிறார்கள். பஞ்சுவின் கதையில், திருமணமானவர்கள் தொடர்பில்லாதவர்களைப்போல வேலை பார்க்கிறார்கள்! 
‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில், கல்லூரி நாட்களில் தவறு செய்துவிட்டு திருந்தும் ஒரு பெண்ணின்  நிம்மதியான குடும்ப வாழ்க்கையைக் கெடுக்க வருகிறான், பழைய கதையை அறிந்த ஒரு கயவன். ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற வெற்றிப்பாடல் இடம்பெறும் இந்த படம் நல்ல தொழில்நுட்ப அம்சங்களுடன் விளங்கியது. கதாசிரியர் பஞ்சுவுடனான இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் சிறந்த, நெடுங்கால கூட்டணிக்கு இந்த படம் அச்சாரமாக விளங்குகிறது. இப்படி அமைந்த இன்னொரு  சிறந்த படம், ‘காலங்களில் அவள் வசந்தம்’.
கதை, வசனகர்த்தாவாக பஞ்சு அருணாசலம் தடம் பதிக்கத்தொடங்கிய படங்களுக்கு பெரும்பாலும் விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார். பாடல்களும் சிறப்பாக அமைந்து, படங்களின் வெற்றிக்குத் துணை புரிந்தன. 
இந்த வகையில், தான் நெருக்கமாக அறிந்த ஜி.கே. வெங்கடேஷிடம் இசை உதவியாளராக இருந்த இளையராஜாவை, பஞ்சு அருணாசலம் ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்ய நேர்ந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற மெட்டுக்களை மையமாக வைத்து கதை எழுதிய பஞ்சு, ‘அன்னக்கிளி’யின் வாயிலாக தமிழ்த் திரை இசையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துவிட்டார். பாடலாசிரியராகவும் பஞ்சு மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.
இளையராஜாவின் அறிமுகம் பஞ்சுவிற்கும் ஒரு புதிய தெம்பை ஊட்டியது. ஏனென்றால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஆரம்பகாலமாகவும் அது விளங்கியது. ரஜினியை வைத்து யதார்த்தமும் சோகமும் நிரம்பிய, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ என்ற படத்தை எழுதித் தயாரித்தார் பஞ்சு. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த வெற்றிப்படமான ‘கல்யாணராம’னும் பஞ்சுவின் உருவாக்கம்தான். இத்தகைய படங்களின் வாயிலாக பஞ்சுவின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷ்ன்ஸ் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக முன்னணிக்கு வந்தது.
பஞ்சு அருணாசலத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு மாறுபட்ட கதை அமைப்புகள் கொண்ட பல படங்கள் கிடைத்தன. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, கதாநாயக நடிகனான சிவகுமாரை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாகவும் சித்தரித்தது. 
‘காயத்ரி’ மாறுபட்ட திகில் படமாக அமைந்தது. பஞ்சு எழுதித் தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’, ரஜினிகாந்த்தை யதார்த்தமான வேடத்தில் வித்தியாசமான கதை அமைப்பில் காட்டியது.  பஞ்சுவிற்குள் இருந்த உயிரோட்டமான பாடல் இயற்றும் திறமை மீண்டும் வெளிக்கிளம்பியது. ‘விழியிலே மலர்ந்தது’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’  (‘பு. ஒரு. கேள்விக்குறி’), ‘குயிலே கவிக்குயிலே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (‘கவிக்குயில்’), ‘வாழ்வே மாயமா’ (‘காயத்ரி’), ‘இதோ இதோ என்  நெஞ்சிலே’ (‘வட்டத்துக்குள் சதுரம்’), ‘பருவமே புதிய பாடல் பாடு’ (‘நெஞ்சத்தை கிள்ளாதே’) என்று பஞ்சுவின் பாடல் வரிகள் நாடெங்கும் ஒலித்தன.
நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் மறைவிற்குப் பிறகு, ஏ.வி.எம். நிறுவனம் மீண்டும் தலைநிமிர்ந்தபோது, ‘முரட்டுக் காளை’, ‘சகலகலாவல்லவன்’, ‘பாயும் புலி’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற வெகுஜன படங்களின் வெற்றிக்கும் பஞ்சுவின் கதை, வசனம் வழி வகுத்தது. எத்தனையோ வித்தியாசமான கதைகளைக் கையாண்ட பஞ்சு, மசாலா படங்களுக்கான சரியான கலைவையையும் கைவசப் படுத்தியிருந்தார்! 
பட இயக்குநர்கள் திட்டம் இல்லாமல் ஏகமாக காசையும் பிலிமையும் வீணடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி, தானே இயக்குநராகி சில படங்கள் எடுத்தார் பஞ்சு. அவை ‘விலகியோடிய மேகங்கள்’. ஆனால் மீண்டும் அவர்  தயாரிப்பாளராக களம் இறங்கிய போது, அவர் சொன்ன காரணத்தாலேயே கையை சுட்டுக்கொண்டார். படவுலகில் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கு மேல்  இயங்கியவர் மறைந்துவிட்டார். அவருடைய நான்கு மக்களில், சுப்பு திரை உலகில் பலவாறு சஞ்சரிப்பவர். தந்தையின் பி.ஏ.ஆர்ட்ஸை மீண்டும் நிமிர வைக்கவேண்டும் என்பது அவரது லட்சியம். ‘ஆகா வந்திருச்சு, ஆசையில் ஓடி வந்தேன்’ என்ற பல்லவியை நாம் மீண்டும் கேட்கக்கூடும்.  

- வாமனன் 

No comments:

Post a Comment