Saturday, June 4, 2016

KADHALIN PON VEEDHIYIL - POOKKARI



படம்: பூக்காரி
இசை: எம்.எஸ்.வி.
குரல்: டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி
பாடல்: பஞ்சு அருணாசலம்


காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..



Tiruchendurai Ramamurthy Sankar  writes :

காதலின் பொன்வீதியில் ( பூக்காரி)
பூக்காரி (1973) , மு.க.முத்துவின் மாக்னம் ஹோப்லஸ் படங்களில் ஒன்று. பிள்ளையோ பிள்ளையில் (1972) அறிமுகமான மு.க.முத்து , எம்.ஜி.ஆர் விக்குடன் தமிழ் சினிமாவிற்கு சொல்லொணாத் துன்பங்கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஒரு புறம் கலைஞர் கண்ணொளித் திட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருந்தது. எமர்ஜென்சியினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை மு.க.முத்துவின் திரைக்காவியங்கள் வருவது நின்றது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு, இங்கேயும் மனிதர்கள் என்று அடித்த புயல் நின்றது. மறுமுறை அவர் இராம.நாராயணனின் , வீரன் வேலுத்தம்பி, SA ராஜ்குமார் இடையில் படத்தில் " சுருளு மீசைக்காரனடி" என்று பந்தா தம்பி ராம்கியைப் புகழ்ந்து பாடும்போது தமிழ்சினிமா அவரை இனிதே மறந்திருந்தது.

வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புரியாத புதிர். ஜெயலலிதா, மூர்த்தி, ஶ்ரீகாந்த்துடன் அறிமுகமாகி, மன்னிப்பு போன்ற படங்களில் சுமாராக நடித்தும் , பெண் சரத்பாபு போல்( பல படங்களில் நடித்தும் ) யாதொரு தடத்தையும் விட்டுச்செல்லாதவர். 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும் , நடனத்தையும், கொண்டிருந்தும், அவர் கண்ணில் தென்படாத ஒன்று ......கான்ஃபிடென்ஸ். இதயக்கனியில் ப்ரப்பிரம்மமாக நிற்கும் ராதா சலூஜாவின் கண்களில் தென்படும் கான்ஃபிடென்ஸ் கூட " தொட்ட இடம் எல்லாம்" பாட்டில் நிர்மலாவிடம் இருக்காது. அவர் எம்.எல்.சி பதவி பெறாததற்கு இது காரணமில்லை எனினும்.
அமிர்தம், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற கழக விசுவாசிகள் கைவண்ணத்தில் உருவான பூக்காரி....மஞ்சுளா பூக்காரி! இந்தப் படத்திற்கு " கைவண்டி இழுக்கும் அப்பாவையும், சினிமாப் பைத்திய தங்கையும் காப்பாற்றும் இளைஞன்" என்று பெயர் வைத்திருந்தாலும். வித்தியாசம் இருந்திருக்காது. பின்னாளில் டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டில் ஶ்ரீதேவியுடன் வந்த கன்னட அம்பரீஷ், வில்லன்! அதேபோல் ஜெயசித்ரா பின்னாளில் சினிமா பைத்தியம் படத்திலும் நடித்தது ஒரு பைத்தியக்கார சிறப்பு.
.......................................................
குமுதம் லைட்ஸ் ஆனில் எம்.எஸ்.வி பற்றி சொல்லும்போது " எம்ஜியாருக்கும் வேண்டியவர், சிவாஜிக்கும் வேண்டியவர், கலைஞருக்கும் வேண்டியவர் என்றால் கோடம்பாக்கத்தில் எம்.எஸ்.விதான்" என்று எழுதியிருப்பார் ரா.கி.ர. அதே 1973 ல் பூக்காரியும், உலகம் சுற்றும் வாலிபனும், பொன்னூஞ்சலும் !
முத்துப்பல் சிரிப்பென்னவோ ( TMS-PS) , முப்பது பைசா மூணு முழம் ( LRE) மற்ற பாடல்கள்.
இந்தப்பாடல் TMS-SJ வின் டூயட்டில் நீல நிறம் ( என் அண்ணன்) மிகச்சிறந்த இரண்டாவது பாடல். ஆனால் இந்தப்பாடல் , கிலோமீட்டர் கணக்கில் முதல் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள். கண்ணை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களிலும் தலையாயது இதுவே. அபாரமான வயலின், ஹம்மிங்!
" விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும்" என்று அந்தக்காட்சியில் நடிகர்கள் இருவரிடமும் இல்லாத ஒன்றைப்பற்றி எழுத ஒரு மனோதிடம் வேண்டும்.
TMS குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும் , ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது.
கண்ணை மூடிக்கொண்டு கேட்கவும்!

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1246478088717248/

Wednesday, June 1, 2016

AVAL ORU PACHAIKUZHANDHAI - NEE ORU MAHARANI



படம் : நீ ஒரு மகராணி
இசை: சங்கர் கணேஷ்
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
பாடல் : வாலி


அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ

(அவன்)

மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ

(அவள்)



Tiruchendurai Ramamurthy Sankar writes:

சங்கர்-கணேஷ்

தேவர் - கவிஞர் இணைந்து வழங்கிய ஜோடி. வேதா அளவிற்கு தூற்றப்படாவிட்டாலும் சற்றே அலட்சியமாகக் கருதப்பட்ட இரட்டையர்கள். எம்.எஸ்.வி -இளையராஜா காலங்களுக்கு நடுவில் சிக்கினாலும் தமிழ்சினிமாவில் சங்கர்-கணேஷின் பங்கு 72-83 வரை முக்கியமானது. நண்பர் சரவணன் சொல்வதுபோல் இளையராஜா படம் பந்தாவாக சாந்தி, ஆனந்தில் வெளியாகும்போது இவர்களின் படங்கள் ஓரமாக காமதேனு, சித்ரா, ஓடியன், பாரகன் தியெட்டரில் சிக்கிவிட்டது விதி.

நீ ஒரு மகராணி (1976) காதலியாக நடிக்கவந்து மனைவியாக மாற வேண்டிய கி.மு காலத்துக் கதை. சுஜாதா, மாமனாராக தேங்காய் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு 1000ரூபாய்க்கு நடித்திருப்பார்கள். பட்டணத்தில் பூதம் படத்தில் டிரிம்மாக வந்து மனதைக் கொள்ளை கொண்ட அண்ணன் ஜெய் , பட்டணத்தைத் தொலத்திருப்பார். 11 மணி குர்லா லோக்கலில் வரும் குஜ்ஜு ஸ்டாக் ப்ரோக்கர்போல் சில காட்சிகளில் சஃபாரி என்ற கொடூரமான உடை வேறு. டைரக்டர் சொர்ணமும், திமுக ஆதரவு படங்களில் அமிர்தமும் ஜெய்யைக் கவிழ்த்தார்கள்.

மூன்று பாடல்கள். யேசுதாஸ்-சுசீலாவின் ," நீ ஒரு மகராணி". சுசீலாவின் " பல்லாண்டு காலம்" ( கணேஷின் ஹம்மிங்குடன்) RDB யின் ஆந்தி பட "தும் ஆகயே "பாட்டை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கம்போஸ் செய்திருப்பார்கள். ( பாடல் காட்சியில் கிதார் வைத்துக்கொண்டு கணேஷ் வருவார்)

ஆனால் அந்த மூன்றாவது பாடல் , திரையில் பல்க்கான ஜெய் , சில்க்கான ஶ்ரீப்ரியாவுடன் ! SPB-PS இன் அடுத்த மாக்னம் ஓபஸ். எம்.எஸ்.வி சாயலில் அவசரமாக ஓடும் டியூன். கொஞ்சும் எஸ்.பி.பி. கூட வரும் வயலின் போல் சுசீலா.

இரண்டு சரணங்களும் வேறு அமைப்பில். டியூன் ரோலர் கோஸ்டரில். இதயவீணை படத்தில் வரும் பொன் அந்தி மாலைப் பொழுது ( அதுவும் சங்கர்-கணேஷ்! ) போல சரணத்தின் 6 வரிகளுக்கும் 3 ட்யூன். ஹாரிஸ் ஜெயராஜ் இதை வைத்து ஒரு படமே செய்திருப்பார்.

சங்கர்-கணேஷ் என்றால் ஆடு வரும்போது டொடொங்-டொங், டொடொங்-டொங், மட்டுமல்ல; இது போன்ற அமர்க்களங்களும் உண்டு....கீபோர்ட் வாசிக்கும் என் மகனுக்கு வாசிக்க மிகவும் பிடித்த பாடல்.

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1244145172283873/